மது குடிக்க பணம் தராத தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது!!
மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் காசிநாத் கசாரே(70). இவரது மகன் தினேஷ் கசாரே(38) அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ’வார்டு பாய்’ ஆக வேலை செய்து வந்தார்.
மதுப் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகி விட்ட தினேஷால் ஒரு நாள் கூட மது அருந்தாமல் இருக்க முடியாது. மது செலவுக்கு தந்தை காசிநாத்திடம் பணம் கேட்டு அவ்வப்போது தினேஷ் தகராறு செய்வது வழக்கம். மகனின் தொல்லை பொறுக்க முடியாமல் எப்போதாவது சில வேளைகளில் காசிநாத்தும் தன்னுடைய பென்ஷன் பணத்தில் இருந்து நூறோ, இருநூறோ தந்து விடுவது உண்டு.
இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் தந்தையிடம் பணம் கேட்டு தினேஷ் தகராறு செய்துள்ளார். தன்னிடம் பணமே இல்லை என்று கூறி மறுத்து விட்ட தந்தையின் பாசத்தை புரிந்துக் கொள்ளாத தினேஷ், வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து, காசிநாத்தின் தலையில் வெறித்தனமாக தாக்கினார்.
இதில் மண்டை பிளந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த காசிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று கைது செய்தனர்.
Average Rating