காதலை கைவிட மறுத்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்ய முயற்சி!!
தஞ்சை விளார் ரோடு பாரதி நகர் 4–வது தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி இவரது மகன் சண்முகநாதன் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவர் விளார் சாலை பகுதியில் டீ கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்றாக சுற்றுவதை கண்ணனின் உறவினர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் தனது மகளையும், சண்முகநாதனையும் கண்டித்துள்ளார்.
இதனால் கடந்த சில வாரங்களாக அவர்கள் சந்தித்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகநாதனிடம் அவரது மகள் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த கண்ணன் சண்முகநாதனை கொலை செய்ய முடிவுசெய்தார். இதுகுறித்து கண்ணன் தனது நண்பர் அமுதுராஜிடம் கூறியுள்ளார். அவர் அதேபகுதியை சேர்ந்த ரவுடிகளிடம் கூறி சண்முகநாதனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சண்முக நாதனிடம் அமுதுராஜ், ரகு, வெடி கோபி, ராஜேஸ் ஆகிய 4 பேரும் சென்று கண்ணனின் மகளை காதலிப்பதை நிறுத்தி கொள்ளும்படி கூறியுள்ளனர். அதனை அவர் ஏற்று கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சண்முகநாதனை வெட்ட முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது அமுதுராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் சண்முகநாதனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார்.
அவர்களிடம் இருந்து தப்பித்து ஒடிய அவரை துரத்தி சென்றுள்ளனர். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார். பின்னர் அரிவாளுடன் சண்முகநாதனை வெட்ட வந்த ரவுடிகள் அவரை காணாததால் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த சண்முகநாதனை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சண்முகநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணன் மற்றும் அவரது நண்பர் அமுதுராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். தஞ்சையில் ஆட்டோ டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating