மேலப்பாளையத்தில் இளம்பெண் வெட்டி சாய்ப்பு: மாமனார் வெறிச்செயல்!!
பாளை பெருமாள்புரம் அருகே உள்ள ராஜகோபால்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது28). இவருக்கு ஒரு மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகேஸ்வரி மேலப்பாளையம் சந்தை அருகே அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இதனால் அவருக்கும் மேலப்பாளையம் ஞானியாரப்பா நகரை சேர்ந்த ரசூல் மைதீன் (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரசூல் மைதீனிடம் வற்புறுத்தினார். அவரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்காக மகேஸ்வரி தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டார். திருமணமான பின்பு 2 பேரும் மேலப்பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ரசூல் மைதீன் மகேஸ்வரியை திருமணம் செய்தது அவரது தந்தை சாகுல் ஹமீதுவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகேஸ்வரியிடம் தனது மகனை விட்டு பிரிந்து செல்லுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஆனால் மகேஸ்வரி, ரசூல் மைதீனை பிரிய மறுத்துவிட்டார்.
இதன் காரணமாக மகேஸ்வரிக்கும், சாகுல் ஹமீதுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சாகுல் ஹமீது மகேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி இன்று காலை மகேஸ்வரி நடத்தி வரும் அழகு நிலையம் அருகே சாகுல் ஹமீது மறைந்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த மகேஸ்வரி அழகு நிலையத்திற்குள் சென்றதும் உள்ளே புகுந்த சாகுல் ஹமீது தான் வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரியை சரமாரி வெட்டினார்.
இதில் அவரது முதுகு, கழுத்து உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் சாகுல் ஹமீது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல் காதர், கதீர் காமு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாகுல் ஹமீதை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating