பிளாட்பாரத்தில் வசித்த சிறுமி விபசார கும்பலிடம் விற்பனை: 2 பேர் கைது!!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து, ஒருகும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, சூப்பிரண்டு பெருமாள் ஆகியோரின் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட ஓட்டலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் ஒரு அறையில், 15 வயது சிறுமியை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரியவந்தது. அந்த சிறுமியிடம், உல்லாசம் அனுபவிக்க ரூ.5 ஆயிரம் பணம் வசூலித்தனர். மாறுவேடத்தில், வாடிக்கையாளர் போல சென்ற போலீஸ்காரர் ஒருவரிடம், இந்த கட்டணத்தை வசூலித்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓட்டலில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமியை மீட்டனர்.
சிறுமியை விபசாரத்தில் தள்ளியதாக, சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் பெண் தரகர் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி விபசாரத்தில் தள்ளப்பட்டதில் பெரும் கொடுமை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் தாயார் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவரது தந்தை கூலித்தொழில் செய்து வந்தார். அந்த வருமானம், அவர்கள் குடும்பம் நடத்த போதவில்லை. வீட்டு வாடகையும் கொடுக்க முடியவில்லை. இதனால் சிறுமி தனது தந்தை மற்றும் தம்பியுடன், சென்னை மூர்மார்க்கெட் அருகே பிளாட்பாரத்தில் குடியேறினார்.
வறுமையை பயன்படுத்தி, உறவினர்கள் சிலர், சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி, தரகர் கிருஷ்ணவேணியிடம் விபசார தொழிலுக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாகவும் தெரிகிறது. தரகர் கிருஷ்ணவேணி, சிறுமியை விபசாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
Average Rating