வனத்துறையினர் மெத்தனம்: பள்ளி மாணவியை கடித்து குதறிய குரங்குகள்!!
கூடலூர் நகர பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 குரங்குகள் புகுந்தது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவு பொருட்களையும், சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்து கொண்டு சென்றுவிடுகின்றன.
இதுமட்டுமின்றி தண்ணீர் தொட்டியில் அசுத்தம் செய்வது, வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வது போன்ற குரங்கு சேட்டையால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடலூர், சக்கனநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் பிருந்தா(7). இவர் 2–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 குரங்குகள் சிறுமி மீது பாய்ந்து அவரது தலைமுடியை இழுத்து உடலில் பரண்டின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் ராமலட்சுமி ஓடிவந்து குரங்குகளை விரட்டி விட்டார்.
இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதே நிலை ஒரு சிறு குழந்தைக்கு ஏற்பட்டு இருந்தால் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
எனவே இனிமேலாவது குரங்குகள் நடமாட்டத்தை தடுக்க கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் கூறும்போது, ‘முன்பு கூடலூர் வனசரகம் என்று ஒரே சரகமாக இருந்தது. தற்போது அது பிரிக்கப்பட்டு கம்பம் மேற்கு, கம்பம் கிழக்கு, கூடலூர் என 3 வனசரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எல்லை எந்த சரகத்தில் வரும் என்பதில் வனஅலுவலர்களிடையே பிரச்சினை உள்ளது. அதனாலேயே பிடிக்க முடியவில்லை’ என்று தெரிவித்தார்.
Average Rating