தோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்!!
கரூர், வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (30).
நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி போன்ற தோற்றம் கொண்ட வாலிபர் ஒருவர் வந்தார். அவர் பிரியாவிடம், ‘உனது கணவனுக்கு பெரிய தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் அது சரியாகிவிடும்’ என கூறியுள்ளார். கணவருக்கு தோஷம் என்றதும் அச்சம் அடைந்த பிரியா பரிகாரம் செய்ய சம்மதித்தார்.
இதையடுத்து பிரியாவையும், அவரது கணவர் ஆறுமுகத்தையும் அந்த வாலிபர் கரூர் ஈஸ்வரன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் அருகே சென்றதும் பிரியாவின் தாலியை கழற்றி புளி உருண்டையில் வைக்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து தனது 1 பவுன் தாலி செயினை பிரியா கழட்டி புளி உருண்டைக்குள் வைத்து வாலிபரிடம் கொடுத்தார்.
புளி உருண்டையை வாங்கிய வாலிபர் கண்களை மூடி மந்திரங்களை சொல்வது போல் நடித்துள்ளார். பின்னர் புளி உருண்டையை பிரியாவிடம் கொடுத்து, வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த புளி உருண்டைக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு புளி உருண்டையில் இருந்து தாலியை எடுத்து அணிந்து கொண்டால் உன் கணவனின் தோஷம் நீங்கிவிடும்’ என கூறி உள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் புளி உருண்டையை நசுக்கி பார்த்த போது அதில் தாலி செயின் இல்லாததை கண்டு கொண்டார். உடனே அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். அவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்தவர்கள் வாலிபரை பிடித்து சோதனை செய்த போது தாலி செயினை வாலிபர் பையில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கரூர் டவுன் போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தொட்டியம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும், மந்திரவாதி போல் நடித்து பலரையும் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating