ஜெயலலிதா நாளை சிறையில் இருந்து விடுதலை ஆகி விடுவார்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி!!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
அவர் எப்போது சென்னை திரும்புவார்? என அ.தி.மு.க. தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த கேள்விக்கு இன்று பதிலளித்த கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்மா, ‘நாளை அவர் நிச்சயமாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்’ என்று தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் நகலை பெற்று, ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நகலை நாளை காலை தாக்கல் செய்து, ஜாமீன் அளிப்பவர்களின் அசையா சொத்து தொடர்பான பத்திரங்களை பிணையாக தாக்கல் செய்த பின்னர், கோர்ட் நடைமுறைகள் நிறைவடையும்.
அதன் பின்னர், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கும் பிணையில் விடுவிக்கும் உத்தரவை பரப்பன அக்ரஹாரா ஜெயில் அதிகாரிகளிடம் வக்கீல்கள் ஒப்படைத்த பின்னர், ஜெயலலிதா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயலிதா விடுதலையாகி சென்னை திரும்பும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் பரப்பன அக்ரஹாரா ஜெயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
கர்நாடகம்-தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான ஓசூர் பகுதி நெடுஞ்சாலை ஓரமுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலைப்பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Average Rating