கண்ணூர் அருகே மனைவி–மகளுடன் கிணற்றில் குதித்து கவுன்சிலர் தற்கொலை!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது இருட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தில் 13–வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்பாபு (வயது 40). இவர் அங்குள்ள கிராம வங்கியில் கலெக்ஷன் ஏஜண்டாகவும் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சைமாவதி (36). இவர்களது மகன் பாபு (12), மகள் நமீதா (7). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பாபு 7–ம் வகுப்பு படித்து வருகிறான். நமீதா 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடன் தொல்லை காரணமாக சந்தோஷ்பாபு அவதிப்பட்டு வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கெல்லாம் தீர்வு குடும்பத்துடன் தற்கொலை செய்வது தான் என்ற முடிவுக்கு வந்தார் சந்தோஷ்பாபு. தனது முடிவை மனைவி, மகள் மற்றும் மகனிடம் தெரிவித்தார். அவர்களும் தினமும் துன்பப்படுவதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று நினைத்தனர். அதன்படி தற்கொலை திட்டத்துக்கு சம்மதித்தனர்.
தற்கொலை செய்வதற்காக சந்தோஷ்பாபு தனது மனைவி, மகன், மகளை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் ஒருவர் பின் ஒருவராக குதித்தனர். இதில் பாபு தவிர மற்றவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
பாபு கிணற்றில் உள்ள படிக்கட்டை பிடித்தபடி ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினான். சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அவனை காப்பாற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அப்போது அவன் எனது பெற்றோரும், தங்கையும் கிணற்றில் குதித்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். நான் மட்டும் படிக்கட்டை பிடித்து உயிர் தப்பினேன் என்றான்.
அதிர்ந்து போன அவர்கள் இருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி சந்தோஷ்பாபு, சைமாவதி, நமீதா ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக கவுன்சிலர் தனது குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating