ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் நடைபெறுவது உறுதி: திகதியும் குறிப்பு!!
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்றும் 24ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி – குண்டசாலை தொகுதி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
24ம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவிருப்பதால் கண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அடிக்கல்நாட்டு விழா பிற்போடப்பட்டுள்ளதாவும் இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் திட்டம் கட்டாயம் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் திகதி தனக்கு தெரிந்தாலும்கூட தற்போது அறிவிப்பது உகந்ததல்ல என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள், சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதால் கட்சி பேதமின்றி அனைவரும் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார்.
ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்ற சர்வதேச சூழ்ச்சி நடைபெறுவதை ஐரோப்பாவில் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மலையகத்தில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் கூட நகர்பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், இதை சொல்வதால் தன்னை இனவாதி எனக் கருத வேண்டாம் என்றும் தான் யதார்த்தத்தையே கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
Average Rating