ராஜஸ்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க ஓசூர் சப்–கலெக்டர் அறிவிப்பு!!
ஓசூர் சப்–கலெக்டர் பிரவீண் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில், கடந்த 8–ந் தேதி, மாலை சுமார் 4 மணியளவில் 4 ராஜஸ்தான் பெண்களை (2 பெரியவர் மற்றும் 2 சிறுமியர்) பாதுகாப்பு பணியில் இருந்த வடிவேல் என்ற போலீஸ்காரர் பாலியல் ரீதியாகவும், அடித்தும் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக ஓசூர் சப்–கலெக்டர் விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்களோ அல்லது இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்களோ, நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகி, சப்–கலெக்டரால் நடத்தப்படும் திறந்தவெளி நீதிமன்ற விசாரணையில் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், இச்சம்பவம் குறித்து ரகசியமாக சாட்சியம் அளிக்க விரும்பினால், சப்–கலெக்டரின் மொபைல் எண் 9445000430–ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating