தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!
“நீண்டகாலமாக வழக்குகள் எதுவுமின்றி நாம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கருகிய இருளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் எமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றோம்.´´
இவ்வாறு நேற்று (20) மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்ததாக அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எமது விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க கேண்டும். எமது பெற்றோரும் உறவுகளும் எமது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்´´ என்றும் அவர்கள் இதன்போது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுப் பகல் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அங்குள்ள தமிழ் கைதிகளுக்கான தீபாவளிப் பண்டிகைப் பொருள்களை சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கினார்.
இதன் பின்னர் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர் உரையாடினார். இதன்போதே மேற்படி விடயங்களைக் கைதிகள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இவர்களின் கருத்துகளைக் கேட்ட சரவணபவன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த சட்டத்தரணிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று விரைவில் சிறைச்சாலைக்கு வரவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குக் கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்று கூறியதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating