ஷேனுகா தொடர்பில் வௌியான குற்றச்சாட்டு குறித்து பீரிஸ் கவலை!!
வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தொடர்பில் வௌியான கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஷேனுகா செனவிரத்ன ஜெனிவாவில் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்த போது, உத்தியோகபூர்வ காரியாலயத்தை புனரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை (கொன்ராக்ட்) தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஒருவருக்கு வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வௌிவிவகார அமைச்சர், குறித்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு நவம்பர் 05ம் திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஷேனுகா செனவிரத்ன இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பொறுப்பேற்றது 2009 நவம்பர் 15ம் திகதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்ட நிறுவன உரிமையாளர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என தாம் அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இது குறித்து ஸ்விஸ் பெடரல் புலனாய்வு சேவையினரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தொடர்பில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தாம் கவலையடைவதாவும் தெரிவித்துள்ளார்.
Average Rating