இராஜ்ஜிய சொத்துக்களை ஒப்படையுங்கள்! ராஜ வாரிசு வழக்கு!!
குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருக்கும் பஞ்சமஹால் மாவட்டம், சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சம்பானர் மாநிலமாக திகழ்ந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மன்னராட்சி ஒழிப்பு முறை, ஜமீன்தாரர்கள் ஒழிப்பு முறை மற்றும் நில உச்சவரம்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, அதிகாரம் பறிக்கப்பட்ட பல குறுநில மன்னர்களில் சம்பானர் மாநில மன்னரும் ஒருவராகிப் போனார்.
இச்சம்பவம் நிகழ்ந்து, சுமார் 65 ஆண்டுகள் கழித்து, சம்பானர் மன்னரின் வாரிசான ஒருவர், ‘தொலைந்துப் போன எனது இராஜ்ஜியத்தின் சுமார் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று குஜராத் மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
முந்தைய சம்பானர் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ‘யுனெஸ்கோ’ வின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத்தலமான பவகாட் ஆலயம் மற்றும் வட்தால் நகரில் உள்ள சுவாமி நாராயணன் ஆலயம் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் சம்பானர் பகுதியை ஆட்சி செய்த எங்களது மூதாதையருக்கு சொந்தமாக இருந்தது.
இதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் 1860-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதனை 1949-ம் ஆண்டில் பம்பாய் ஐகோர்ட்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பின்னாட்களில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்திய அரசு அந்த சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து விட்டது.
இப்போது, அந்த சொத்துக்களை வெளிப்பகுதிகளில் இருந்துவந்த யார், யார் எல்லாமோ கட்டி, ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, சம்பானர் இராஜ்ஜியத்தின் வாரிசான என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுதாரரான ராஜேந்திரசின்ஹ் தாக்கோர் என்பவர் குஜராத் மாநில ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனுவினை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி எஸ்.எச். வோரா, வழக்கின் விசாரணையை வரும் 11-ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Average Rating