எல்லை மீறும் மீனவர்கள் குறித்து சட்டமா அதிபருக்குக் கடிதம்!!
இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னார் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியுள்ளனர்.
மன்னார் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் என்.எம்.எம்.ஆலம், யாழ் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் அந்தனி எமிலியான்பிள்ளை ஆகிய இருவருமே வடபகுதி கடற்தொழிலாளர்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தமது சட்டத்தரணி உபேந்திர குணசேகர ஊடாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இது குறித்து மன்னார் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் எம்.எம்.ஆலமை பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, “தற்போது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழேயே இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிக்கின்றார்கள் என்ற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்படுகின்றார்கள்.
ஆனால் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடிக்கின்ற வெளிநாட்டவர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடற்தொழில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் கோருகிறோம்” எனக் கூறினார்.
இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய மீனவர் சங்கத் தலைவர்களின் சட்டத்தரணி உபெந்திர குணசேகர, “கடற்தொழில் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றபோதிலும், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர் இருந்தால், அவரை அல்லது அந்த படகுக்குப் பொறுப்பாக வரகின்ற ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைத்து அவருக்குத் தண்டனை வழங்க முடியும், இதன் ஊடாக இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று தமது கட்சிக்கார்கள் எதிர்பார்க்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
Average Rating