முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும்!!
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
தாம் அமைச்சராக இருந்த போது, மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 150 கோடி ரூபா நிதி மோசடி குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க மின் சக்தி அமைச்சராக இருந்தபோது நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சுமார் 150 கோடிக்கும் அதிக தொகை மோசடி செய்யப்பட்டுள்ளாதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில், அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கேள்வி எழுப்பினார்.
நிலக்கரி கொள்வனவில் 150 கோடியே 70 இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து நூறு ரூபாய் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாவும், இதை நிவர்த்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஹர்ச டி சில்வா வினவினார்.
இதற்கு பதிலளித்த தற்போதைய மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நீதிபதியின் அறிவுரைக்கமைய, இது குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இது குறித்து எவரேனும் தவறிழைத்திருந்தால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை தமக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை எனவும், இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பவித்ரா வன்னியாராச்சி கூறிய இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்டார்.
சுமார் இரண்டு வருடங்களில் பின்னரே நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், எவ்வாறாயினும், சட்ட மாஅதிபர் ஆலோசனைகளின் பிரகாரமே நிலக்கரி கொள்வனவு விவகாரம் இடம்பெற்றதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கூறினார்.
இதுவொரு சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல் எனத் தெரியவந்த பின்னர், அந்த நிலக்கரியை மின் உற்பத்தி நிலையத்திற்குள் கொடுவருவதையோ அல்லது அங்கு களஞ்சியப்படுத்தி வைப்பதையோ தாம் நிராகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Average Rating