வீரியம் – பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கும் திட்டம்!!
அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அழிந்துவரும் பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கவென வடக்கு விவசாய அமைச்சால் ´வீரியம்´ எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (23) முழங்காவில் ஜெயபுரம் வடக்கு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பாரம்பரியப் பயிரினங்களின் விதைகளை வழங்கி வைத்து உரையாற்றும்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அதிகளவு இரசாயன உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் கலப்பினங்களை விளைவிக்கப் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, உணவில் கலக்கும் இரசாயனங்களின் மூலம் நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இதனால், கலப்பு இனப் பயிர்களுக்குப் பதிலாகச் செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மையை உலகநாடுகள் ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன.
இயற்கை அல்லது சூழலியல் விவசாயத்துக்குக் கலப்பினப் பயிர்களைவிட பாரம்பரியப் பயிரினங்களே மிகவும் பொருத்தமானவை. இதனால் வழக்கொழிந்து அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்து மீளவும் பயிரிடவேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதனாலேயே, நோய்நொடிக்கு ஆளாகாமல் எமது மண்ணில் வீரியத்துடன் வளரக்கூடிய பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கும் ´வீரியம்´ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
வீரியம் திட்டத்தில் நாம் விவசாயிகளுக்கு இலவசமாகப் பாரம்பரியப் பயிர்களின் விதைகளை வழங்கினால், அறுவடையின் பின்னர் விவசாயிகள் எமக்கு இரட்டிப்பு மடங்கு விதைகளைத் தரவேண்டும்.
இந்த விதைகளை நாம் வேறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் விரைவிலேயே பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்துப் பெருமளவில் பெருக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
Average Rating