பிரதேச நகர மாகாண சபைகளின் 104 பேர் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளனர் -57 பேர் குற்றவாளிகள்!!
2004ஆம் ஆண்டு முதல் இற்றை வரையிலான காலப்பகுதி வரையில் நகர சபை, பிரதேச சபை, மாகாண சபை ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 104 உறுப்பினர்கள் மீது ஊழல் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களாக உள்ளனர் எனத்தெரிவித்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மேற்படி நபர்களில் 57 பேர் சட்டத்தின் முன்னிலையில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டிருப்பதாகவும் நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இந்திக்க பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வியெழுப்பிய ரஞ்சன் ராமநாயக்க எம்.பி., 2004முதல் இன்று வரையில் நகர சபை பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் ஊழல் குற்றச்செயல்கள் அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அவர்களது பெயர் விபரங்கள் கட்சிகள் அவர்களது பதவி நிலைகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை பெற்றுள்ளோர் தொடர்பிலேயே கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அத்துடன் மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களில் தொடர்புடையோர் அல்லது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோர் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்ன என்றும் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார கூறுகையில்,
நகர சபை பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளைச்சேர்ந்த 104 உறுப்பினர்கள் மீது ஊழல் சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
மேற்படி உறுப்பினர்களில் 103 உறுப்பினர்களை சட்ட நடவடிக்கைகளுக்குள் உட்படுத்தப்பட்டதில் அவர்களில் 57 பேர் இதுவரையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
குற்றமிழைத்தவர் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Average Rating