காலிமுகத்திடல் கடலில் மூழ்கி காணாமல்போன இளைஞர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம்!!
கொழும்பு காலி முகத்திடல் கடற்பரப்பில் குளிக்க சென்ற போது நேற்று காணாமல் போன ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திடம் வினவிய போதே இதனை தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 6 மணியளவில் காலி முகத்திடலில் இருவர் குளிக்க சென்ற போது ஒருவர் மூழ்கியதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கோட்டை பொலிஸாரும் மூழ்கிய இருவரில் ஒருவரை உயிரிழப்பிலிருந்து மீட்டனர். இதன்போது வெளிநாட்டவர் ஒருவரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடலில் மூழ்கிய இருவரில் மீட்கப்பட்டவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடலில் மூழ்கிய மற்றைய நபர் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றே பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய காணாமல் போனவர் 23 வயதான நகுலேஷன் என்ற இளைஞனாவார். குறித்த இளைஞர் ஹட்டன் திக்ஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் என்றே விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் காணாமல் போனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே கோட்டை பொலிஸ் நிலையம் தெரிவித்தது.
இருப்பினும் கடலில் மூழ்கி காணாமல் போனவர் உயிரிழந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இதற்கமைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலில் குளிக்க சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating