ரணிலாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் -காமினி பெரேரா!!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருந்தாலும் இதுவே எமது நிலைப்பாடு என்று ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அணுசக்தி சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கே அவர் மேலும் கூறுகையில்,
இந்நாட்டின் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள். அதேபோன்று தமிழ் மக்கள் சிங்களவர்களின் சகோதரர்கள். சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே சித்திரைப்புதுவருடத்தைக் கொண்டாடுகிறோம். ஆகவே அந்த சமூகத்தினர் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாம் இங்கு குருடர்களாகவே இருந்து வருகிறோம்.
அனைத்து விடயங்களில் இந்நாடு பயணித்துக்கொண்டிருக்கும் பாதை நேர்மைத்தன்மை வாய்ந்ததா என்பது குறித்து நாம் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்நாட்டில் நாம் ஜனநாயகத்துடனான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்கே விரும்புகிறோம். இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
Average Rating