4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது!!
பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். போலீசார் அவர்களை அமைதிபடுத்தினர்.
இந்த நிலையில் நேற்றும் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரசாரும் பங்கேற்றனர். அவர்கள் பள்ளியின் பெயர் பலகையை கருப்பு மை பூசி அழிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினார்கள். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பதை அறிய பள்ளியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
பள்ளியில் மொத்தம் 90 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 10 பேர் ஆண்கள். இதில் சம்பவத்தன்று 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இவர்களில் பள்ளிக் கூட ஊழியர்கள் குண்டன்னா உள்பட 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கன்னட மொழியில் பாடங்கள் நடத்துவதற்காக மட்டுமே கல்வித் துறையிடம் அனுமதி வாங்கி உள்ளனர். ஆனால் அனுமதியை மீறி 1 முதல் 7-ம் வகுப்புகள் வரை நடத்தி வந்தது தெரிய வந்தது.
கன்னட மொழிக்கு பதில் ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய கர்நாடக கல்வித்துறை அரசுக்கு சிபாரிசு செய்து உள்ளது. எனவே பள்ளிக் கூடம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட உள்ளது.
Average Rating