மதுரையில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை!!
மதுரை வில்லாபுரம் கணபதிநகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் யமுனாதேவி (வயது24). முதுகலை பட்டதாரியான இவர் நேற்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து குணசேகரன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், ராஜபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையை அடுத்துள்ள திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் செந்தமிழரசி (19). இவர் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார். தீபாவளிக்காக ஊருக்கு வந்த இவர் பெங்களூர் செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழரசியை தேடி வருகின்றனர்.
மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் சுகன்யா (20). இவர் அங்குள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அட்டை கம்பெனியில் இருந்த அவர் சாப்பிட செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீட்டுக்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating