விருத்தாசலம்: பெண் கொலையில் விவசாயி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!
விருத்தாசலம் காட்டு கூடல் சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுடைய மகன் சண்முகம்.
சுப்பிரமணியன் குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற விவசாயிக்கும் விநாயகர் சதுர்த்தியின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த விவகாரம் நீறுபூத்திருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி பலியானார். நேற்று அவரது இறுதி சடங்கு நடந்தது.
துக்க வீட்டுக்கு சுப்பிரமணியன் குடும்பத்தினரும், குமரேசன் மற்றும் அவரது தரப்பினரும் சென்றிருந்தனர். அங்கு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் குமரேசன் தரப்பினர் ஆத்திரமடைந்து சுப்பிரமணியனை தாக்கினர். அதனை தடுக்க முயன்ற சகுந்தலாவும் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த சகுந்தலா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி விருத்தாசலம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். அதன்பேரில் குமரேசன், அவரது தரப்பை சேர்ந்த பூமாலை, கிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating