இளம்பெண் கவுரவக்கொலை: போலீசில் சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த அபிராமம் பச்சேரியை சேர்ந்தவர் சேகர் (வயது45). விவசாயி. இவருடைய மகள் முத்துலட்சுமி (வயது 18), 11–ம் வகுப்பு படித்து விட்டு வீட்டு வேலையை கவனித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்தவர், ஞானசேகரன் (38). இவருக்கு திருமணம் முடிந்து 4 குழந்தைகள் உள்ளனர்.
முத்துலட்சுமிக்கும் ஞானசேகரனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த முத்துலட்சுமியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சேகர், முத்துலட்சுமியை தாக்கி கழுத்தை நெரித்தார். இதில் முத்துலட்சுமி இறந்து போனார்.
இந்த கவுரவக் கொலை குறித்து பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி முத்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் முத்துலட்சுமியின் தந்தை சேகர் அபிராமம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
என் மகள் முத்துலட்சுமிக்கும் 4 குழந்தைகளின் தந்தை ஞானசேகரனுக்கும் தொடர்பு இருந்து வந்தது. பலமுறை கண்டித்தும் அவள் திருந்தவில்லை. 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஞானசேகரனுக்கு குழந்தைகள் உள்ளன என்று எடுத்துக் கூறியும் முத்துலட்சுமி கேட்கவில்லை.
ஞானசேகரனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முத்துலட்சுமி அடம் பிடித்தாள். இதனால் அவமானம் அடைந்த நான் முத்துலட்சுமியை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக அபிராமம் போலீசார், சேகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating