ஐ.தே.க வின் ரவி,யோகா,அஜித்,நலின் உள்ளிட்ட அறுவர் பிணையில் விடுதலை!!
ஆளும் கட்சியின் துறைமுக தொழிற்சங்க கிளையின் கட்டிடமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். யோகராஜன், ரவி கருணநாயக்க, அஜித் பி பெரேரா மற்றும் நளின் பண்டார ஆகிய நால்வருக்குமே பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேரும் துறைமுக அதிகார சபையின் சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க கட்டிடத்துக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், இதனை நிராகரித்த எதிர்த்தரப்பு சட்டத்தரணி, குறித்த கட்டிடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றும் ஆகவே அதற்குள் நுழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கக் கட்டிடம் ஒன்று சட்ட விரோதமான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே தாம் அங்கு சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தமது வாகனங்களின் மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸார் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதி திலின கமகே, அரச நிறுவனமொன்றுக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகியிருந்தால் இவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதைத் தவிர்த்துக் கொண்டிருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
கடந்த 23 ம் திகதி கொழும்பு, கொம்பெனிதெரு பகுதியில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டிடமொன்றை சோதனையிடச் சென்றபோதே சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Average Rating