இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது!!
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி சிறையில் சென்று பார்வையிட்டதுடன் விடுதலைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
இதனை அடுத்து இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு உணவு உட்கொண்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி மீனவர்கள் 24 பேரையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது 24 மீனவர்களையும் கடந்த எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களில் 7 பேர் தம்மை விடுதலை செய்யக் கோரி யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating