கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மனைவிமார் தொகை அதிகரிப்பு!!
வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின்தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவதாக அங்குள்ள ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளன.
வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குள் உள்ளடங்கும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்),கோறளைப்பற்று மத்தி(வாழைச்சேனை-முஸ்லிம்),கோறளைப்பற்று(வாழைச்சேனை -தமிழ்),கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலேயே இச்சம்பவங்கள் நடந்தேறி வருவது கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாக இப்பிரதேச செயலகப்பிரிவுகளில் அடங்கும் எல்லைக்கிராமங்களான காவத்தமுனை,பாலைக்காட்டுவெட்டை,ரிதிதென்ன,ஜெயந்தியாய,மாஞ்சோலை,செம்மணோடை,பிறைந்துரைச்சேனை,கல்குடா,புதுக்குடியிருப்பு,சுங்காங்கேணி,கருவாக்கேணி,வாகனேரி,மினுமினுத்தவெளி போன்ற பகுதிகளிலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
வாழைச்சேனை பொலிஸ்நிலையத்தில் செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகள்,வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் பாதிப்புக்குள்ளான மனைவிமாரின் வாக்குமூலங்கள்,மத்தியஸ்த சபைக்கு வருகின்ற முறைப்பாடுகள்,காழி நீதிமன்ற விசாரணைகள்,ஆலய மற்றும் பள்ளிவாயல் தர்மகர்தாக்களிடம் வந்துசேருகின்ற முறைப்பாடுகள்,நீதிமன்றங்களுக்கு வரும் விசாரணைகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இச்சம்பவங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
வறுமை,காணிப்பிரச்சினை,சொத்துப்பங்கீடுகளில் உள்ள பிரச்சினைகள்,இரண்டாம்தார திருமண வாழ்க்கைகளினால் ஏற்படுகின்ற குழப்பங்கள்,கள்ளத்தொடர்புகள்,போதைப்பொருள்பாவனைகள் இவ்வாறு மனைவிமார் தாக்கப்பட்டு வருவதற்குறிய காரணங்களாக அறியப்பட்டு வருகின்றன.அத்துடன் கன்னத்தில் அறையப்பட்டும்,வயிற்றுப்பகுதிகளில் உதைக்கப்பட்டும்,நகக்கீறல்கள்,தீக்காயங்கள் போன்ற பாதிப்புக்களை பெண்கள் சந்தித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Average Rating