மகனை சந்திக்க டுபாயில் இருந்து முஷரப்பின் தாயார் வருகை!!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் மீது ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத (தடுப்பு) நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட வேளையில் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய முஷரப், தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.
4 தொகுதிகளில் முஷரப் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து தண்டித்த வழக்கில் சரியாக ஆஜராகாததால் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் அடைக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், டுபாயில் உள்ள தனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் துபாய்க்குச் சென்று அவரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றில் முஷரப் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், வெளிநாட்டிற்கு செல்வதற்கு அனுமதியளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் முஷரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பாகிஸ்தானில் இருக்கும் மகனை வந்து சந்திக்க டுபாயில் உள்ள அவரது தாயார் விரும்பினார்.
விமானப் பயணத்தை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்ததால் தனது பயணத்தை ஒத்திப்போட்ட முஷரப்பின் தாயார் ஸரீன் முஷரப், இன்று பிற்பகல் 12.40 மணியளவில் டுபாயில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு புறப்பட்டார்.
அந்த விமானம் இன்று மாலை கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவருடன் முஷரப்பின் நெருங்கிய உறவினர்கள் சிலர் வருவதாகவும் முஷரப்பின் மனிவியான ஷெஹ்பா டுபாயில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
Average Rating