சொத்துக்களை அபகரித்த மாமனாரை கண்டித்து விஷம் குடித்து தாய்–மகள் பலி!!
திண்டுக்கல் அருகே கன்னிவாடி போலீஸ் சரகம் கொட்டாரம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. அவரது மனைவி வனஜா (வயது 40). இவர்களது மகள் பிரவீணா (13).
நேற்று காலை வனஜா தனது மகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு போலீஸ் சூப்பிரண்டு இல்லை. எனவே அவர் கொண்டு வந்த மனுவை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில் எனது கணவர் பாண்டி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்னர் எனது மாமனார், கணவர் வாங்கிய கடனுக்காக என்னிடம் இருந்த 10 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டார். அதன்பிறகு எனது பெயரில் இருந்த வீட்டையும் மிரட்டி கையெழுத்து வாங்கி வேறு ஒருவருக்கு மாமனார் விற்றுவிட்டார்.
தற்போது எனக்கும், எனது மகளுக்கும் உதவி செய்ய யாரும் இல்லை. எனவே மாமனார் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் பறித்த சொத்துக்களை மீட்டு தரவேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கிறதோ! இல்லையோ! என்ற சந்தேகத்தில் நானும் எனது மகளும் வரும்போதே விஷம் குடித்து வந்து விட்டோம்.
இவ்வாறு கூறியவாறு தாய்–மகளும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்தனர்.
இதனை பார்த்த அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆட்டோ வரவழைக்கப்பட்டது. தாயும்–மகளும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை மோசமானது. உடனே 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating