இருவருடனும் ஒரே வேளையில் குடும்பம் நடத்திய டிரைவரை சேர்ந்தே கொன்ற சக்களத்திகள்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அந்த வீட்டில் வேலை செய்துவந்த ஆசியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் ஒரே நேரத்தில் தொடர்பு வைத்திருந்த அவர், தனிமை கிடைக்கும் வேளைகளில் இருவருடனும் நெருங்கிப் பழகி வந்தார்.
அவரது போதாத நேரம்.., இரு பெண்களும் ஒரே நேரத்தில் மனதை திறக்க, இருவரின் மனங்களுக்குள்ளும் ஒளிந்திருந்த ‘உள்ளங்கவர் கள்வன்’ ஒருவன்தான் என்பதை அறிந்த இருவரும் திகைத்துப் போயினர்.
’அந்த அயோக்கியனுடன் நாம் இருவரும் இனி ஒன்றாக சேர்ந்து வாழவே முடியாது’ என்று முடிவெடுத்த அவர்கள், ஒன்றாக சேர்ந்து அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று, அந்த டிரைவர் நல்ல உறக்கத்தில் இருந்தபோது, இரண்டு பெண்களும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
அவரது தலையின் பக்கத்தில் நிறைய மாத்திரைகளை போட்டு வைத்து, வெகு காலமாக நோய்வாய்பட்டு கிடந்ததால் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்ததுபோல் ‘செட்டப்’ செய்து வைத்து விட்டு, இரு பெண்களும் தலைமறைவாகினர்.
அந்த டிரைவரின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் இந்த படுகொலை தொடர்பான சந்தேகம் எழுந்ததையடுத்து, இரு பெண்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
Average Rating