மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்பை கண்டறிய புதிய முயற்சி!!
கூகுள் நிறுவனம் உடலில் மாரடைப்பு, புற்றுநோய் அறிகுறிகளை கண்டறிய புதிய முறையை பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் எக்ஸ் ஆய்வகத்தில் அறிவியல் குழுவினர், நானோ துகள்களின் உதவியோடு மனித உடலினுள் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பை சென்ஸார்கள் மூலம் தெரியப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து வருகின்றனர்.
இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த பரிசோதனை முதற்கட்ட ஆய்வில் உள்ளது. ஆனால், நாங்கள் பல சோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளதால் இதனை தொடந்து நடத்த இருக்கிறோம்.
இந்த தொழில்நுட்பம் இதய இரத்த குழாயில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா அல்லது கீமோதெரபி சிகிச்சைக்கு பின் புற்று நோய் பரவுகிறதா எனக் கண்டறிந்து, நோயின் தாக்கத்தை துவக்கத்திலேயே தடுத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க வழிவகுக்கும்.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காந்த தன்மை கொண்ட நுண்ணிய நானோ துகள்கள் மாத்திரை வடிவில் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அவை இரத்தத்துடன் கலந்ததும் இரத்தத்தில் புற்றுநோய் போன்ற ஏதேனும் பாதிப்பு இருந்தால் அந்த செல்களுடன் ஒட்டிக்கொள்ளும்.
நானோ துகள்களின் காந்த தன்மை அதனை சென்சாருக்கு அருகே கொண்டு சேர்த்தப்பின், ஒளி அல்லது ரேடியோ அலைகள் போன்ற துளையில்லாமல் கண்டறியும் முறையை பயன்படுத்தி நோய் தாக்கத்தை அறிய இயலும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating