ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்!!
அலகாபாத்தில் இருந்து டெல்லி செல்ல வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த பெண் ஒருவர் ராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
அலகாபாத்திலிருந்து திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்ற 28 வயது பெண்ணிடம், அதே ரெயில் பெட்டியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க கழிவறைக்கு அருகே சென்ற அப்பெண்ணை ராணுவ வீரர்கள் தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.
ஆனால், சமயோசிதமாக செயல்பட்ட அப்பெண், கதவில் ஒட்டப்பட்டிருந்த அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே காவல் துறையினர், குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்களை கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இச்சம்பவம் தொடர்பாக மூன்று ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. வீரர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ராணுவத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகள் வந்த பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
Average Rating