பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!!
பெங்களூரில் மீண்டும் ஒரு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விசாரணையில் சிறுமி படிக்கும் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெய்ஷங்கர் சிறுமியை இருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் அலோக் குமார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்ற வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரில் கடந்த இரு வாரங்களில் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating