மனைவியை கொலை செய்து விட்டு 4 ஆண்டுகள் தலைமறைவான கணவர் கைது!!
மயிலாடுதுறை தாலுகா, நமச்சிவாயபுரம், காளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 34). இவர், காரைக்கால் பச்சூரை சேர்ந்த உஷா (26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பச்சூரில் உள்ள மனைவியின் வீட்டில் தங்கி இருந்து மதுபானக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மரக்கட்டையால் தாக்கியதில் உஷாவிற்கு தலையில் பலத்த அடிபட்டது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து கணவர் ரஜினி தப்பியோடி தலைமறைவானார். இது தொடர்பாக காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறை வான ரஜினியை 4 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.
காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பழனிவேலு பொறுப்பேற்ற பிறகு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் இளம்பெண் உஷா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரஜினி, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மயிலாடுதுறை அருகில் உள்ள காளியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு பழனி வேலு உத்தரவின்பேரில் காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மர்த்தினி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவு 2.00 மணியளவில் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ரஜினியை கையும், களவுமாக பிடித்து கைது செய்து காரைக்கால் கொண்டு வந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்
Average Rating