புர்கினா பாசோ நாட்டின் அதிபர் ராஜினாமா: ராணுவ ஆட்சி அமல்!!
ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டின் அதிபராக பிளைஸ் காம் போர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் இவர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அங்கு அடுத்த ஆண்டு (2015) நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தாமல் தனது பதவி காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர முயன்றார்.
இது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் குயாகாடோகாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அது வன்முறையாக மாறியது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. பாராளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன.
வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து அதிபர் பிளைஸ் காம்போர் பணிந்தார். நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகர் குயாகாடோகோவை விட்டு வெளியேறி தலைமறைவானார். இந்த தகவலை பிரான்ஸ் தூதரக வட்டாரங்கள் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அதிபர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ராணுவ தலைமை தளபதி நவேர் ஹொனேர் தரோர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சட்டப்படி அதிபர் பதவி விலகியதை தொடர்ந்து காலியிடத்தை நிரப்ப ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் இன்னும் 90 நாட்களில் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
Average Rating