தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!
மத்தியப் பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், விக்லமேடி கிராமத்தைச் சேர்ந்த தேவ்சின் மெர்வான்(30) என்பவர் கூலி வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு செல்லும் ஜபல்பூர்-சோம்நாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுக் கொண்டிருந்தார்.
குஜராத்தில் உள்ள ஆனந்த் மற்றும் நாடியாட் ரெயில் நிலையங்களுக்கு இடையில் அவர் பயணித்த பெட்டியில் இன்று காலை ஏறிய இரு திருநங்கைகள் அங்கு அமர்ந்திருந்த பயணிகளிடம் தர்மம் கேட்டபடி சென்றனர்.
தனியாக அமர்ந்திருந்த தேவ்சின் மெர்வானின் அருகில் சென்ற அவர்கள், தங்களுக்கு நூறு ரூபாய் தர வேண்டும் என்று கேட்டு அவரிடம் வம்பு செய்தனர். அவர் தர்மம் தர மறுத்துவிடவே அந்த திருநங்கைகளுக்கும் தேவ்சின் மெர்வானுக்குமிடையில் வாய்த் தகராறு உருவானது.
அப்போது, சற்றும் எதிர்பாராத நிலையில் தன்னிடமிருந்த கூரிய ஆயுதத்தை எடுத்த மஹி கண்வர் என்ற திருநங்கை, தேவ்சின் மெர்வானின் நெஞ்சில் மாறி,மாறி குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கிக் கிடந்த வேளையில் நாடியாட் ரெயில் நிலையம் வந்ததும், ரெயிலில் இருந்து கீழே இறங்கிய திருநங்கையர் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த தேவ்சின் மெர்வான், ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேருவதற்குள் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், குஜராத்தில் உள்ள காம்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மஹி கண்வரை கைது செய்துள்ளனர்.
Average Rating