பண்ருட்டி அருகே சிறுமியின் திருமணம் நிறுத்தம்!!
பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 32), விவசாயி. இவருக்கும் பூண்டி குச்சிப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் 14 வயது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த சிறுமி அந்த பகுதியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை புதுப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண் அழைத்து வரப்பட்டார். உறவினர்களும் வந்திருந்தனர்.
சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அவர் பிற அதிகாரிகளிடம் அந்த திருமண மண்டபத்திற்கு சென்றார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று கூறினார். பின்னர் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிறுமியை மீட்டு கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Average Rating