வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள் -தாய் சாட்சியம்!!
சம்பவ தினம் நான் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். எனது மகள் மட்டுமே வீட்டில் இருந்தார். திரும்பி வந்த போது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு கோயில்போரதீவு என்றும் இடத்தைச் சேர்ந்த இ. நிசாந்தினி (வயது 19) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான இ. கோவிந்தமலர் (வயது 40) என்பவர் கூறினார்.
இவரின் மரண விசாரணை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்டது. அப்போது சாட்சி மேலும் கூறியதாவது
எனது கணவர் கட்டாரில் சில காலம் தொழில் செய்தார். அப்போது அங்கு வேலை செய்யும் புதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மகளுக்கு திருமணம் பேசினர். பின்னர் அவர் மகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கதைத்தார். இந்த நிலையில்தான் மகள் தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அவர் இறப்பதற்கு வேறு சந்தேகம் எதுவும் எமக்கு இல்லை. இவ்வாறு அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.
பிரேத பரிசோதனை செய்த களுவாஞ்சிகுடி சட்ட வைத்தியர் எம்.எம்.ஏ. ரகுமான் கழுத்தில் சுருக்கு போட்டதனால் மிடர் அறுந்து சுவாசம் தடைப்பட்டு மரணம் ஏற்பட்டது என்று அறிக்கை சமர்ப்பித்தார். தற்கொலை மரணம் என்று தீர்ப்பு வழங்கிய மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை தாயாரிடம் ஒப்படைத்தார்.
Average Rating