அரியலூர் அருகே வேலைக்கு சென்ற மனைவியை கடத்திய கணவர்!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் மஞ்சுளா. இவரது கணவன் ஆரோக்கிய ராஜ். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து கடந்த 2013–ல் கணவரை விட்டு பிரிந்த மஞ்சுளா. தனது தந்தை லெட்சுமணன் வீட்டில் குழந்தைகளுடன் தங்கினார். மேலும் அருகில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் மஞ்சுளா வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் மஞ்சுளா வேலைக்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவரை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் மஞ்சுளாவை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
வேலைக்கு சென்ற மகளை காணாது திகைத்த லெட்சுமணன் பல இடங்களில் தேடினார். பின்னர் இது பற்றி ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மஞ்சுளாவின் கணவர் ஆரோக்கிய ராஜ் மற்றும் 3 பேர் சேர்ந்து மகளை கடத்தியதாக கூறினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தி மஞ்சுளாவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
Average Rating