திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்து கைவிட்ட போலீஸ்காரருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!!
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனைச் சேர்ந்தவர், ராஜேந்திர சிங். போலீஸ் வேலைக்கு தேர்வான இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு ஒரு இளம்பெண்ணை காதலிக்க தொடங்கிய ராஜேந்திர சிங், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி, தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். இதன்மூலம் இருமுறை கருவுற்ற அந்தப் பெண்ணிடம் எதேதோ சாக்குப்போக்கு கூறி, இருமுறையும் கருக்கலைப்பு செய்யவைத்த அவர், இறுதியில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று கூறி கைகழுவி விட்டார்.
இதனால், கொதித்தெழுந்த பாதிக்கப்பட்ட பெண், திருமண ஆசைகாட்டி தன்னை கற்பழித்து, பின்னர் கைவிட்டதாக ராஜேந்திர சிங் மீது போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, ராஜேந்திர சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டேராடூன் கோர்ட்டில் அவர் மீது கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கற்பழிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த டேராடூன் மாவட்ட கூடுதல் நீதிபதி நிதின் ஷர்மா, குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Average Rating