பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் சாவு!!
குஜராத் மாநிலம், வதோதரா அருகேயுள்ள பரூச் நகரை சேர்ந்த ஒரு தம்பதியரின் 6 வயது மகன் ஷாஹித் சாஜித்பாய் பட்டேல் என்பவனை நேற்று காணாததால் அவனை பெற்றோர் தேடினர்.
எனினும், அப்பகுதியில் நேற்று நடைபெற்ற முஹர்ரம் ஊர்வலத்தை பார்க்க உறவினர்களுடன் அவன் சென்றிருக்கலாம் என்று கருதிய அவர்கள், பொறுமையாக இருந்தனர்.
இரவு வெகு நேரமாகியும் அவன் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்துவிட்டு கவலையுடன் வீட்டில் காத்திருந்தனர். அப்போது வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் காருக்குள் இருந்து ஒருவித சப்தம் வந்ததை கேட்ட அவர்கள் காரை திறந்து பார்த்தபோது, உள்ளே ஷாஹித் சாஜித்பாய் பட்டேல் பிணமாக கிடந்தான்.
அவர்களின் உறவினர் மகனான மற்றொரு 5 வயது சிறுவன் வியர்த்து, விறுவிறுத்து மயங்கி விழும் நிலையில் இருந்தான். அந்த காருக்குள் அமர்ந்து இரு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தபோது, எத்தேச்சையாக காரின் கதவு பூட்டிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அந்த காரின் கண்ணாடிகளில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டிருந்ததால், குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டதை யாராலும் கவனிக்க முடியவில்லை என தெரிகின்றது.
சுமார், நான்கைந்து மணி நேரம் சுவாசக்காற்று சுழலக்கூட வழியின்றி, ஷாஹித் சாஜித்பாய் பட்டேல் காருக்குள் மூச்சுத்திணறி இறந்து விட்டான்.
மற்றொரு சிறுவனான அனாஸ் அல்தாப் பட்டேல் காரினுள் இருந்தபடி தட்டிய சப்தம் கேட்டு காரின் கதவை திறந்துப் பார்த்தபோதுதான் இந்த விபரீதம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
காரினுள் இருந்த உயிருடன் மீட்கப்பட்ட அனாஸ் அல்தாப் பட்டேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறான். சிறுவன் ஷாஹித் சாஜித்பாய் பட்டேல் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating