காதல் தூது சென்ற போது தடுத்ததால் தோழியின் தாய் மீது மிளகாய் பொடி வீசிய மாணவி!!
வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் ராதா. அதே பகுதியை சேர்ந்தவர் ரோகினி (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது). தோழிகளான இருவரும் ஒரே பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்கள்.
பேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த வாலிபருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ராதாவை பெற்றோருக்கு தெரியாமல் வெளியில் அழைத்து வரும்படி அந்த வாலிபர் ரோகினியிடம் கூறினார்.
அடிக்கடி தோழி வீட்டுக்கு செல்லும் நாம் காதலுக்கு உதவியது தெரிந்தால் விபரீதம் ஆகிவிடும் என்று நினைத்த ரோகினி அதிரடி திட்டத்துடன் இறங்கினார்.
முகத்தை துப்பட்டாவில் சுற்றியபடி பாதுகாப்புக்காக கையில் மிளகாய் பொடியுடன் தோழி ராதா வீட்டுக்கு அவர் காதல் தூதுக்காக சென்றார்.
காதலன் குறித்தும், வெளியே அழைத்து வரக் கூறியது பற்றியும் ராதாவிடம் தெரிவித்து கொண்டிருந்த போது அவரது தாய் அங்கு வந்தார்.
முகமூடியுடன் நின்ற ரோகினியை யார் என்று தெரியாமல் கொள்ளையடிக்க வந்த ‘திருடி’ என்று நினைத்து தடுத்து கூச்சலிட்டார்.
இதனால் பயந்து போன ரோகினி சிக்கினால் அவமானமாகிவிடும் என்று கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ராதாவின் தாய் முகத்தில் வீசினாள். கண் எரிச்சலில் அவர் கதறி துடித்தார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் முகமூடியுடன் நின்ற ரோகினியை மடக்கி பிடித்தனர். முகத்தில் சுற்றிய துப்பட்டாவை விலக்கி பார்த்த போது அவர் ராதாவின் தோழி என்பது தெரிந்தது.
இதுபற்றி தெரிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ராதாவை வெளியே அழைத்து வராவிட்டால் எனது முகத்தில் ஆசிட் வீசுவதாக அவளது காதலன் மிரட்டியதால் இப்படி செய்ததாக ரோகினி போலீசில் கூறினார்.
இருவரும் பள்ளி மாணவிகள் என்பதால் போலீசார் அவர்களை எச்சரித்து வழக்கு பதிவு செய்யாமல் அறிவுரை கூறி அனுப்பினர். மிரட்டல் விடுத்த பேஸ்புக் காதலன் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating