கத்தியை காட்டி மிரட்டி போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!
திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 40). இவரும் அவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். 2 நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று கணவன்–மனைவி 2 பேரும் தோட்டத்து வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் பதறிபோன அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர்கள் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிக்கப்பட்டது. திருக்குறுங்குடி அருகே உள்ள லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (30). இவர் மணிமுத்தாறு அதிரடி படையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ராஜசெல்வி (27).
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ராஜசெல்வியை நேற்று சுந்தர்ராஜன் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். டாக்டர்களிடம் காண்பித்து விட்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். மாவடி செங்கல்சூளை அருகே செல்லும் போது அவர்களை பின்தொடர்ந்து 2மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
திடீரென அவர்கள் சுந்தர்ராஜன் மோட்டார் சைக்கிளை மறித்து ராஜசெல்வி அணிந்திருந்த தங்கசெயினை கழற்றி தருமாறு கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதில் பயந்து போன ராஜசெல்வி செயினை கழற்றி கொடுத்து விட்டார். இதையடுத்து மர்மநபர்கள் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிக்கப்பட்ட செயினின் மதிப்பு ரூ 1.50 லட்சம் இருக்கும். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஜவஹர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் போலீஸ்காரர் கண்முன்னே அவரது மனைவியிடம் தங்கசெயின் பறிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating