தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!
தூத்துக்குடி எஸ்.பி.ஜி. தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). அப்பகுதியில் ஷாப்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஹேனா. இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஹேனாவுக்கு திருமணமாவதற்கு முன்பு அவரை தூத்துக்குடி முத்துநாயக்கர் தெருவை சேர்ந்த ஹரிதாஸ் (28) என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஹேனா அவரை காதலிக்கவில்லை. இருப்பினும் ஹரிதாஸ் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தையடுத்து ஹேனாவுக்கு அவரது பெற்றோர் ஜெயபாலை மாப்பிள்ளை பார்த்து அவருக்கு திருமணம் செய்து விட்டனர்.
ஹேனாவை ஜெயபால் திருமணம் செய்தது ஹரிதாசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் ஜெயபாலிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று குடிபோதையில் ஜெயபால் கடைக்கு சென்ற ஹரிதாஸ், எனது காதலியை நீ திருமணம் செய்து கொண்டாயே என்று கூறி அவரிடம் தகராறு செய்தாராம். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ஹரிதாஸ் கத்தியால் ஜெயபாலை குத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த ஜெயபாலை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஹரிதாசை கைது செய்தனர். ஒரு தலைக்காதல் விவகாரத்தில் புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating