கருத்தடை சிகிச்சை செய்த 8 பெண்கள் பலி – 33 பேரின் நிலை கவலைக்கிடம்!!
சத்திஸ்கரில் மாநில அரசு சார்பில் பிலாஸ்பூரில் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் பலியானார்கள். மேலும் 33 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆண்டு தோறும் நடைபெறும் “குடும்ப கட்டுப்பாடு” சிறப்பு முகாமில் கலந்து கொண்டு 80 பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அவர்களுக்கு பிலாஸ்பூர் அருகே பெண்டாரி பகுதியில் உள்ள நேமிசந்த் மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் பலருக்கு கடுமையான காய்ச்சலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. இதன் காரணமாக 8 பேர் பலியான நிலையில் மேலும் 33 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் உயிரிழப்புக்கு கருத்தடை சிகிச்சை தான் காரணம் என்பதை அம்மாநில சுகாதாரத்துறை மறுத்துள்ளது. ஆனால் ஒரே நாளில் இலக்கை அடையவேண்டும் என்பதற்காக அவசர கதியில் கருத்தடை சிகிச்சை செய்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், சுகாதாரத்துறை மந்திரியின் சொந்த தொகுதியிலேயே கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்துள்ளனர். உடனடியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மருத்துவனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50000 வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Average Rating