மரண தண்டனையில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்!!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
மோடி தனது கட்சி தலைவர்களை ஒழித்து, கட்சியை கைப்பற்றி சர்வாதிகாரியானார். தற்போது, மாநில கட்சிகளை ஒழிக்க நினைக்கிறார். தமிழகத்தில் சில கட்சி தலைவர்கள் தங்களை பாஜக மதிக்கவில்லை என்று தெரிந்தும் அக் கட்சியுடன் இருக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதிக்கு, மோடி விருந்து கொடுத்தபோதே பாஜகவிலிருந்து வெளியே வந்திருக்க வேண்டாமா?
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்பதில் மாற்றுக் கருத்தே எனக்கு இல்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழர்களுக்கு தீமைகளை தொடர்ந்து செய்துவரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அப் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
‘தமிழர்களை காப்பாற்ற ஏன் உங்கள் ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற கேள்வி எங்கள் மீது திரும்பும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் வந்தபோது ஆதரித்திருந்தோம்.
இப்போது இந்திய மீனவர்கள் ஐவருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அக்குடும்பத்தினருக்கு நூறோ, இருநூறோ கொடுப்பது எங்கள் வேலையில்லை. மரணத்தில் இருந்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும், என்றார் இளங்கோவன்.
Average Rating