மகன் திருமண நாளில் மொய் கவர் வாங்க சென்ற கிறிஸ்தவ போதகர் விபத்தில் பலி!!
கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கத்தை அடுத்த பாண்டூர் சீதக்காதி சாலையை சேர்ந்தவர் முருகேசன் (50). வீட்டின் அருகில் சொந்தமாக தேவாலயம் நடத்தி வருகிறார். அதில் அவர் பாஸ்டராகவும் உள்ளார். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 5 மகன்கள். ஒரு மகள் உள்ளனர்.
இவர்களது கடைசி மகன் ஏசுபாதம் திருமணம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் மண்டபம் எதிரில் உள்ள கடைக்கு மொய் கவர் வாங்குவதற்காக முருகேசன் சாலையை கடந்தார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஓட்டி வந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
மகன் திருமண நாளில் தந்தை பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating