பிலாஸ்பூர் கருத்தடை மரணங்கள்: பணம் தருவதாக ஆசை காட்டி பெண்களை பலியாக்கியது அம்பலம்!!
சத்திஸ்கர் மாநில அரசின் சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 13 பெண்கள் பலியான நிலையில், இந்த ஆபரேஷனுக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ‘நிறைய பணம் கிடைக்கும். ஏராளமான மருந்துகள் இலவசமாக கிடைக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறி பழங்குடியினப் பெண்களையும் பலியாக்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் கருத்தடை ஆபரேஷன் செய்துக் கொள்ளும் பெண்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை இந்த மாதம்தான் 600 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்த பெரிய தொகையை காட்டி, பழங்குடியின பெண்களுக்கு ஆசையை உண்டாக்கி கருத்தடை ஆபரேஷனுக்கு அழைத்துவந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் போக ஆபரேஷனுக்கு பின்னர் உயிர்தப்பிய பெண்களுக்கு வெறும் 30-40 ரூபாயை மட்டுமே தந்துள்ளனர்.
சத்திஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாரி, கொர்வா, பைகா, அபுஜ்மாரியா, பிர்ஹார் மற்றும் கமர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பழங்குடியினம் அழியும் நிலையில் உள்ளதால், இந்த இனத்தைச் சேர்ந்த பெண்களை வற்புறுத்தி, அவர்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்யக்கூடாது என்று 1970-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
ஆனால், அந்த சட்டத்தை எல்லாம் மீறிய வகையில் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 260 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கவுரேலா பகுதியில் வசிக்கும் 18 பெண்களை பண ஆசை காட்டி சிலர் இந்த ஆபரேஷனுக்கு அழைத்து வந்ததாக பைகா இன மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த இனத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே பிலாஸ்பூர் கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்யப்பட்டது என மாநில அரசு தரப்பில் கூறப்படுகின்றது.
Average Rating