சென்னையில் நள்ளிரவில் வாலிபர்களை தாக்கி 8 சவரன் நகை பறிப்பு!!
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் கண்ணன் (35), திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராமசந்திரன் (37). இருவரும் தியாகராயநகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
15.11.2014 இரவு நிறுவன வேலை தொடர்பாக இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பாரிமுனை வந்தனர். பின்னர் பணி முடிந்து மன்றோ சிலை வழியாக நள்ளிரவு 12 மணியளவில் தியாகராய நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடியை வீசினார்கள். இதனால் கண் எரிச்சலில் தடுமாறிய கண்ணன், ராமசந்திரன் இருவரையும் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். இதில் ராமசந்திரனுக்கு தலையில் 4 வெட்டு விழுந்தது.
யாரும் உதவிக்கு வராத நிலையில் கொள்ளையர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய அவர்கள் அணிந்து இருந்த செயின், பிரேஸ்லெட், 2 மோதிரங்கள் உள்பட 8 சவரன் நகைகளை பறித்து சென்று விட்டனர். மேலும் கையில் ஒரு பையில் வைத்திருந்த 8 பாஸ் போர்ட்டுகளையும் பிடுங்கி சென்று விட்டார்கள்.
அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு அரசு பொதுமருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating