சென்னை: ஓடும் பஸ்சில் இடிமன்னர்களை பிடிக்க பெண் போலீசின் வெள்ளை சுடிதார் படை!!
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, ஓடும் பஸ்சில் பெண் வக்கீலிடம், வாலிபர் ஒருவர் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட வாலிபர் மீது கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த வாலிபரை கைது செய்ய உதவி கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். சென்னையில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபடும், இடி மன்னர்களை பிடிக்க, வெள்ளை சுடிதார் அணிந்த மாறு வேட பெண் போலீசாரை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை நிற சுடிதார் அணிந்த பெண் போலீசாரை, வெண்மைப்படை என்று அழைக்கிறார்கள். ரோந்து போலீசில் நீலப்படை, மஞ்சள் படை செயல்படுவது போல இந்த பெண் போலீஸ் வெண்மைப்படையும் செயல்படும்.
இந்த வெள்ளை சுடிதார், மாறு வேட பெண் போலீசார் சென்னை முழுவதும் ஆங்காங்கே சுற்றி வருவார்கள். பஸ்களில் பயணிகளோடு, ரகசியமாக பயணம் செய்வார்கள். அவர்கள் இடி மன்னர்களை மடக்கிப்பிடித்து, போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பார்கள்.
இந்த வெண்மை பெண் போலீஸ் படை, எங்கு, எப்போது வருவார்கள் என்பது ரகசியமாக இருக்கும். இவர்கள் இடிமன்னர்களின் கொண்டாட்டத்தை அடக்குவார்கள், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ்களில் ஈவ்டீசிங் பிரச்சினையை தடுக்க, சென்னை மாநகர பஸ்களில் பெண் கண்டக்டர்களை அதிக அளவில் நியமிக்க வேண்டும், என்ற கோரிக்கை பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அரசு மாநகர பஸ்களில் பெண் கண்டக்டர்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating