போலீஸ் தாக்குதலில் கருச்சிதைவு: சிசுவின் பிரேதத்துடன் டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு தாய் போராட்டம்!!
போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் தனது வயிற்றில் இருந்த கரு சிதைந்ததால் குறைப்பிரசவத்தில் குழந்தையை காலனுக்கு பறிகொடுத்த இளம்பெண், இறந்த சிசுவின் பிரேதத்துடன் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பட்ரபூர் பகுதியை சேர்ந்த ஒருவரை குற்றவழக்கு தொடர்பாக கடந்த மாதம் 25-ம் தேதி போலீசார் கைது செய்யச் சென்றனர். அதை தடுக்க முயன்ற அவரது கர்ப்பிணி மனைவியை அடித்த போலீசார், வயிற்றின் மீதும் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மமி(26) என்ற அந்தப் பெண், இந்த தாக்குதலுக்குப் பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்துவந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மமிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை இறந்துப் பிறந்தது.
இந்த குறைப்பிரசவத்துக்கு போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்தான் காரனம் என்று குற்றம்சாட்டிய மமி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தனது கணவர், உறவினர்கள், கிராமவாசிகள் மற்றும் தனது (பிறக்கும் முன்னரே) இறந்த குழந்தையின் பிரேதத்துடன், பெஹ்ரம்பூரில் உள்ள போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தின் முன்னர் போராட்டம் நடத்தினார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மமியின் போராட்டத்துக்கு ஆதரவாக சில அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் ஒன்று திரண்டதால் நிலைமை எல்லை மீறும் அளவுக்கு செல்வதை உணர்ந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால், விரைந்துவந்த பெஹ்ரம்பூர் (தெற்கு) சரக போலீஸ் டி.ஐ.ஜி., இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட மனித உரிமைப் பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவதாக உறுதியளித்த பின்னர், அந்த இடத்தை விட்டு போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.
Average Rating